UPDATED : அக் 01, 2025 10:54 PM
ADDED : அக் 01, 2025 10:55 PM
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இடிபாடு களில் சிக்கிய, 100க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் முஸ்லிம் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ஒரு கட்டடத்தில் மாணவர்கள் நேற்று மதிய தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது கட்டடம் திடீரென இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில் ஒரு மாணவன் உயிரிழந்தார். ஏராளமானோர் காயமடைந்தனர்; இடிபாடுகளில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள். ஏனெனில் கட்டடத்தின் மற்றொரு பகுதியில் மாணவியர் தனியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். பெரும்பாலும் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 7 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களே இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.