UPDATED : ஜூன் 19, 2025 12:00 AM
ADDED : ஜூன் 19, 2025 10:55 AM

சென்னை:
சென்னையில் கல்லுாரி திறந்த முதல் நாளான, கடந்த 16ம் தேதி, மாநகர பேருந்துகளில் கல்லுாரி மாணவர்களின் அட்டகாசம் துவங்கியது. இதனால், அரசு மாநகர பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மட்டும் இன்றி பயணியரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், கல்லுாரி மாணவர்கள் செல்லும் வழித்தடங்களில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட போலீசாருக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, துணை கமிஷனர் ராமமூர்த்தி கூறியதாவது:
சென்னையில் கல்லுாரி மாணவர்கள் பயணிக்கும் சாலைகளில், 257 இடங்களில் கண்காணிப்பு பணியில், 1,000 போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
கல்லுாரி துவங்கும், முடியும் வேளையில், காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை; மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர். மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

