10ம் வகுப்பு மறுமதிப்பீடு 3000 பேர் மதிப்பெண் மாற்றம்
10ம் வகுப்பு மறுமதிப்பீடு 3000 பேர் மதிப்பெண் மாற்றம்
UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM
ADDED : ஜூன் 28, 2024 08:05 AM

சென்னை:
பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடும்; 10ம் வகுப்புக்கு மறுகூட்டல் வசதி மட்டும் நடைமுறையில் இருந்தது. 10ம் வகுப்புக்கும் மறுமதிப்பீடு முறை வேண்டும் என்ற, மாணவர்களின் கோரிக்கை, நம் நாளிதழில் செய்தியாக வெளியானது.
இதையடுத்து, இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல் மட்டுமின்றி, மறுமதிப்பீடும் அறிமுகமானது. இந்த திட்டம் அறிமுகமான நிலையில், 5000க்கும் மேற்பட்ட, 10ம் வகுப்பு மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியாகின.
மறுதிருத்தம் செய்ததில், 3022 மாணவ, மாணவியருக்கு, விடைகளில் மாற்றம் உள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டது. மறுமதிப்பீடு முறை அறிமுகமான முதல் ஆண்டிலேயே இவ்வளவு அதிகமான மாணவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1959 பேருக்கும், பிளஸ் 1ல், 491 பேருக்கும் மதிப்பெண் மாறியது குறிப்பிடத்தக்கது.