UPDATED : ஜூலை 03, 2024 12:00 AM
ADDED : ஜூலை 03, 2024 09:43 AM

உடுமலை:
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு வரும், 8ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வினை, மாவட்டத்தில், 11 மையங்களில், 3,244 பேர் தேர்வெழுதுகின்றனர்.
தமிழகத்தில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகளும், ஏப்ரல் மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடந்தன. இதில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியானது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், மே, 10ம் தேதி வெளியானது. மாவட்டத்தில் தேர்வெழுதிய, 30 ஆயிரத்து, 180 பேரில், 27 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றனர்; 2,301 பேர் தேர்ச்சி பெறவில்லை.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், துணைத்தேர்வு நடத்த தேர்வுத்துறை மே இரண்டாவது வாரம் அறிவிப்பு வெளியிட்டது; மே, 16 முதல் பல மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நேற்று துவங்கியது. வரும் 8ம் தேதி வரை இத்தேர்வு நடக்கவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 11 மையங்களில் தேர்வு நடக்கிறது; மொத்தம், 3,244 பேர் தேர்வெழுத உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், பத்து இடங்கள் பின்தங்கிய திருப்பூர், 21வது இடம் பெற்றது.
முந்தைய ஆண்டை விட அதிகளவில் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறவில்லை. இதனால், துணைத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை நடப்பாண்டு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட தேர்வுகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.