ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட்டின் 14வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட்டின் 14வது பட்டமளிப்பு விழா
UPDATED : ஏப் 08, 2025 12:00 AM
ADDED : ஏப் 08, 2025 01:59 PM
சென்னை:
சென்னை ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின், 13வது மற்றும் 14வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ லியோ முத்து உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிவதாணுபிள்ளை பங்கேற்று, கல்வியாண்டில் சிறந்த மாணவ - மாணவியர் 31 பேருக்கு, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்களை வழங்கினார்.
விழாவில், 964 இளங்கலை, 143 முதுகலை உட்பட மொத்தம் 1,107 பட்டதாரிகளுகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
சாய்ராம் குழும நிறுவனங்களின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சாய் பிரகாஷ் லியோமுத்து பேசும்போது, கொரோனாவுக்கு பின் சகோதரத்துவத்துடன் கல்வியை மேற்கொள்ள, அனைத்து வசதிகளுடன் தயாராக இருந்த ஒரே கல்லுாரி சாய்ராம் மட்டுமே. கற்றதை பகிர்வது, அறிவையும் நற்செயல்களையும் வளர்க்கிறது என்றார்.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனர் சிவதாணுபிள்ளை பேசுகையில், உலகில் ஒரு தனித்துவமான நிலையில் இந்தியா உள்ளது; ஏனெனில், இந்தியாவில் திறமையான இளைஞர்கள் உள்ளனர். தற்போது 35 வயதிற்கு உட்பட்டோர் 80 கோடி பேர் உள்ளனர். அவர்கள், காலத்திற்கு ஏற்றார்போல திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு துறையிலும் சாதிக்கலாம் என்றார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கல்வி கூட்டணிகளின் தலைவரும், சிறப்பு விருந்தினருமான கே.எம்.சுசீந்திரன் பேசும்போது, நாம் சமூக ஊடகங்கள், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதிக நேரம் செலவிடுகிறோம். உடற்தகுதிக்காக குறைந்தது, 30 நிமிடங்கள் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அனைத்து சூழல்களிலும் கடினமாக உழைக்க வேண்டும். அப்படியானால் நட்சத்திரமாக ஜொலிக்கலாம் என்றார்.

