தி.மு.க., ஆட்சியில் 1.55 லட்சம் பேருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
தி.மு.க., ஆட்சியில் 1.55 லட்சம் பேருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
UPDATED : பிப் 14, 2026 02:03 PM
ADDED : பிப் 14, 2026 02:05 PM

சென்னை:
“தி.மு.க., ஆட்சியில், 1.55 லட்சம் பேருக்கு, அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியே 4,707 பேர்; மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வழியே 3,184 பேர்; ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே 1,910 பேர் என, அரசு துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 பேருக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
உரிமைத் தொகை
அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, 27 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இன்று, 'குட் மார்னிங்' மட்டுமல்ல, தமிழகத்துக்கு இது ஒரு 'சூப்பர் மார்னிங்' ஆக அமைந்துள்ளது. பல தடைகளை, சூழ்ச்சிகளை முறியடித்து, காலையில், 1.31 கோடி பேருக்கு, சிறப்பு தொகுப்பாக 5,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் முதல்வராக, ஐந்தாண்டுகள் இருந்தேன். இனியும், அனைவரையும், அனைத்து வகையிலும் உயர்த்தக்கூடிய முதல்வராக, தமிழகத்தை தொடர்ந்து, 'நம்பர் 1' ஸ்டேட்டாக உயர்த்தக்கூடிய எண்ணத்தோடு, எனக்கு பொறுப்புணர்வு கூடியிருக்கிறது.
பக்கபலம்
கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற, நீங்கள்தான் எனக்கு பக்கபலமாக இருக்க போகிறீர்கள்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கடந்த ஐந்தாண்டுகளில், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக 45,126 பேர்; சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 24,927; ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 12,894; மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 11,244 பேர்; அரசு துறைகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக 54,864; விளையாட்டு இடஒதுக்கீட்டில் 177; கருணை அடிப்படையில் 5,899 பேர் என, மொத்தம் ஒரு லட்சத்து 55,131 இளைஞர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு பயணங்களால், தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வாயிலாக, 38 லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சுப்பிரமணியன், மகேஷ், கயல்விழி செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய திட்டங்கள் துவக்கம்!
விழாவில், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைத்தார். அதன் விபரம்:
சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லுாரியில், 3.39 கோடி ரூபாயில் கட்டப்பட்ட எட்டு குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
சென்னை, செனாய் நகரில், 62.50 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
அரசு அலுவலர்கள், செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ., உட்பட பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள, 'திறன் 360' என்ற இணையம் துவக்கப்பட்டது.
அனைத்து போட்டித்தேர்வு முகமைகள் நடத்தும் தேர்வு குறித்த அறிவிப்புகளை தொலைபேசி வழியே அறிய, 'தேர்வுக்களம்' எனும் செயலி துவக்கப்பட்டது.

