புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் மாவட்டத்தில் 1,687 மாணவியர் பயன்
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் மாவட்டத்தில் 1,687 மாணவியர் பயன்
UPDATED : ஜன 01, 2025 12:00 AM
ADDED : ஜன 01, 2025 09:53 AM

திருப்பூர்:
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் துாத்துக்குடியில் துவக்கிவைத்தார்.
திருப்பூரில், குமரன் மகளிர் கல்லுாரியில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் விழா நடந்தது. எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
பயனாளி மாணவியருக்கு டெபிட் கார்டுகளை வழங்கி அமைச்சர் கயல்விழி பேசுகையில், புதுமைப்பெண் திட்டம் வாயிலாக, திருப்பூர் மாவட்டத்தில், 68 கல்லுாரிகளில் படிக்கும் 10, 651 மாணவியரும், தமிழ் புதல்வன் திட்டத்தில், 43 கல்லுாரிகளில் படிக்கும் 7,047 மாணவர்கள் பயன்பெற்றுவருகின்றனர். புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தில், 52 கல்லுாரிகளில் படிக்கும், 1,687 மாணவியர் பயன்பெற உள்ளனர்.
திட்டங்கள் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவியரின் உயர்கல்வி உறுதி செய்யப்படுகிறது. குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படும்; பள்ளி, கல்லுாரி இடைநிற்றல் விகிதம் குறையும் என்றார்.
மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, துணைமேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.