217 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு
217 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு
UPDATED : மே 26, 2025 12:00 AM
ADDED : மே 26, 2025 11:04 PM
தங்கவயல்:
அங்கன்வாடி மையங்களில் ஜூன் 1 முதல் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் துவங்குகிறது. கோலார் மாவட்டத்தில் 217 இடங்களில் நடத்தப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை இயக்குநர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கோலாரில் அங்கன்வாடி கட்டடங்களை பார்வையிட்ட பின், அவர் அளித்த பேட்டி:
மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோலார் மாவட்டத்தில் பங்கார்பேட்டையில் 33, பேத்தமங்களாவில் 22, கோலாரில் 32, மாலுாரில் 63, முல்பாகலில் 30, சீனிவாசப்பூரில் 37 என 217 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்படுகின்றன. ஜூன் 1 முதல் வகுப்புகள் துவங்கும்.
மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகம், பைகள் இலவசமாக வழங்கப்படும். இவற்றில், 129 சொந்தக் கட்டடத்திலும், 11 சமுதாய பவன்களிலும், 24 பள்ளி கட்டடங்களிலும், 11 பஞ்சாயத்து கட்டடங்களிலும், 42 தனியார் கட்டடங்களிலும் இயங்கும்.
பி.யு.சி., மற்றும் பட்டதாரிகளுக்கு பாடம் நடத்த வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இவர்கள் கன்னடம், ஆங்கில வழியில் பாடங்கள் கற்றுத் தருவர்.
மூன்று முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அங்கன்வாடியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 முதல் 5 வயதுக்கு உட்பட்டோர் எல்.கே.ஜி.,யிலும்; 5 முதல் 6 வயதுக்கு உட்பட்டோர் யு.கே.ஜி.,யிலும் சேர்க்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பட்டியலில் தங்கவயல் நகரம் இடம் பெறவில்லை. தங்கவயலிலும் அங்கன்வாடி மையம் உள்ளது. ஆயினும் அரசின் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்துவதாக அறிவிப்பு எதுவும் இல்லை.