இஸ்ரோவிலிருந்து 25 சதவீத விஞ்ஞானிகள் வெளியேறினர்: திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்
இஸ்ரோவிலிருந்து 25 சதவீத விஞ்ஞானிகள் வெளியேறினர்: திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்
UPDATED : ஜூலை 20, 2026 10:38 AM
ADDED : ஜூலை 20, 2026 10:39 AM

கடந்த மாதத்தில் மட்டும், 10 சதவீத விஞ்ஞானிகள், சமீப காலமாக, 25 சதவீத விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளதால், இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரோவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நுாற்றுக்கும் அதிகமான முதல்நிலை விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளனர். சமீப காலமாக, 1,000க்கும் மேற்பட்டோர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இது, இஸ்ரோவின் மொத்த பணியாளர்களில், 25 சதவீதமாகும்.
இதனால், இஸ்ரோவின் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விஞ்ஞானிகள் ராஜினாமா செய்யவும் மற்றும் விருப்ப ஓய்வு பெறவும், விண்வெளி துறை தடை விதித்துள்ளது.
கடந்த, 2020ல், மத்திய அரசின் விண்வெளி துறையானது, விதிகளை மாற்றி, தனியாரும் விண்வெளி திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பளித்தது. அப்போது, ஒரு நிறுவனம் மட்டுமே இதில் பங்கேற்றது. பின்னர், மத்திய அரசின் ஊக்குவிப்பால், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பிக்சல், பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ், துருவா ஸ்பேஸ், திகந்தரா' உள்ளிட்ட 400 நிறுவனங்கள், இந்திய விண்வெளி ஆய்வில் இணைந்துள்ளன. இவை மிக வேகமாக, ராக்கெட் வடிவமைப்பு, செயற்கைக்கோள் கட்டமைப்பு, உந்துவிசை செயல்பாடுகளில் வளர்ந்து வருகின்றன.
இவற்றுக்கு மிகவும் திறமையான விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, பணி ஏற்ற உடனேயே மிகப்பெரிய திட்டங்களுக்கு, தலைமை ஏற்கும் பொறுப்பு, பல மடங்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க முன்வருகின்றன. இதனால், தன்னிச்சையாக சாதிக்க துடிக்கும் இளம் விஞ்ஞானிகள், இஸ்ரோவில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளனர். ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளில் சிலர், புத்தாக்க நிறுவனங்களின் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் செயல்படுகின்றனர்.
தாமதம்
ஊழியர்கள் வெளியேறியதால், இஸ்ரோவின் இந்தாண்டு திட்டங்களான, 'ககன்யான் ஜி1, எஸ்.எஸ்.எல்.வி - எல்., - 1, ஜி.எஸ்.எல்.வி., - எப்., - 17' உள்ளிட்டவை தாமதமாகி உள்ளன. மேலும், 10க்கும் மேற்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரட்டை பி.எஸ்.எல்.வி., திட்டங்கள் தோல்வி அடைந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டுக்குள் ஏழு விண்கலங்கள், ஆறு செயற்கைக் கோள்களை, இறுதி செய்யும் கட்டாயத்தில் இஸ்ரோ உள்ளது. மேலும், குலசேகரப்பட்டினம் விண்வெளி நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடப்பதால், சிறிய ரக ஏவுதல்களை, அங்கிருந்து நடத்தும் ஆய்வுகளும் நடக்கின்றன. அந்த பணிகள் பாதிக்காமல் இருக்க, விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வுக்கு, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
