வாங்கடா வண்டியை தள்ளுங்கடா: இலவச சைக்கிள் பெற்ற மாணவர்கள் சோகப்பாட்டு
வாங்கடா வண்டியை தள்ளுங்கடா: இலவச சைக்கிள் பெற்ற மாணவர்கள் சோகப்பாட்டு
UPDATED : டிச 13, 2025 09:32 AM
ADDED : டிச 13, 2025 09:33 AM
திருப்பூர்:
தேர்தல் நெருங்குவதால், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை இம்மாதம், 31ம் தேதிக்குள் வழங்கி முடிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும், 491 மாணவர்களுக்கு நேற்று இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் தங்கமனோகரி தேவி (பொறுப்பு) தலைமை வகித்தார். தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் சைக்கிள்களை வழங்கினார்.
பல சைக்கிள்களில் காற்று நிரப்பவில்லை; சக்கரம் சுழல செயின் இல்லை. முன்பக்க, பின்பக்க பார் நெளிந்து இருந்தது. வீட்டுக்கு ஓட்டிச் செல்ல ஆர்வமாக இருந்த மாணவர்கள், பள்ளியை விட்டு வெளியே வந்ததும் ஒர்க் ஷாப் தேடி அலைந்தனர். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் சைக்கிள் பழுதை சரிசெய்ய முயன்றனர். முடியாதவர்கள் சோகத்திலும் சினிமா பாட்டு பாடியபடி தள்ளி சென்றனர். சிலர் பெற்றோரை வரவழைத்து, சைக்கிளை வேறு வாகனத்தில் துாக்கி சென்றனர்.
பெற்றோர் கூறுகையில், 'இலவச சைக்கிள் பாகங்களை மொத்தமாக கொண்டு வந்து, பள்ளியில் இரண்டு மாதமாக பொருத்தினார்கள். ஒரு சைக்கிளை கூட சரியாக அசெம்பிள் செய்யவில்லை. இனியாவது, தரமான உபகரணங்கள் வாங்கி, வேலை தெரிந்த ஆட்களை கொண்டு சரியாக பொருத்தி தர வேண்டும்,' என்றனர்.

