சித்தகங்கா மாணவர்களுடன் ஏப்., 1ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாடல்
சித்தகங்கா மாணவர்களுடன் ஏப்., 1ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாடல்
UPDATED : மார் 22, 2026 12:24 PM
ADDED : மார் 22, 2026 12:26 PM

துமகூரு:
“துமகூரு சித்தகங்கா மடத்தில் படிக்கும் 10,000 மாணவர்களுடன், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாடுகிறார்,” என மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
துமகூரில் அவர் அளித்த பேட்டி:
சித்தகங்கா மடத்தின் மறைந்த மடாதிபதி சிவகுமார சுவாமிகள் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மார்ச் 31ம் தேதி பெங்களூரு வருகிறார். மறுநாள் காலையில் சித்தகங்கா மடத்திற்கு வருகிறார். இங்குள்ள சிவகுமார சுவாமிகளின் பிருந்தாவனத்தை தரிசிக்கிறார். பின், மடத்தில் படித்து வரும் 10 ஆயிரம் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதனை தொடர்ந்து நடக்கும் சுவாமிகளின் பிறந்த நாள் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன், மாவட்ட பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, அமைச்சர் எம்.பி., பாட்டீல், உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். ஏழைகள் மீது ஜனாதிபதி கொண்டுள்ள அக்கறையை பார்த்திருக்கிறேன். அவர் இங்கு வருவது எனக்கு பெருமையாக உள்ளது.
துமகூரு ரயில் நிலையத்துக்கு சித்தகங்கா மடத்தின் ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் பெயரை சூட்டும் பணி ஏற்கனவே துவங்கிவிட்டது. அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குள் இப்பணி முடிவடையும்.
என்னை பொறுத்தவரை நாடு என்றால் மோடி, மோடி என்றால் வளர்ச்சி. நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த பல திட்டங்களை நாட்டுக்காக அறிமுகப்படுத்தி வருகிறார். அதில் துமகூரு மாவட்டமும் சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

