''உலகத்தர கல்வியை கிடைக்காமல் செய்ததற்கு வெட்கப்பட வேண்டும்''
''உலகத்தர கல்வியை கிடைக்காமல் செய்ததற்கு வெட்கப்பட வேண்டும்''
UPDATED : பிப் 10, 2025 12:00 AM
ADDED : பிப் 10, 2025 07:34 PM

சென்னை:
புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக்கொள்கையை நிராகரித்ததற்காக, தமிழக கல்விக்காக வழங்க வேண்டிய 2,152 கோடி நிதியை பறித்து வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளதாக ஸ்டாலின் கூறியிருந்தார்.
அரசியல் பழிவாங்களுக்காக, கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்ற அரசு இந்திய வரலாற்றில் இருந்தது இல்லை என அவர் கூறியிருந்தார். இதற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம் தனது பெருமையை தொலைத்து எண் கணிதத்திலும், தாய்மொழியான தமிழ் அறிவிலும் கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியல் ஆக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழக குழந்தைகளுக்கு சமமான வாய்ப்பு, உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும். இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே PM SHRI உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக தமிழக அரசு உறுதியளித்தது.
இந்த உறுதிமொழியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினாரா இல்லையா? செயல்படுத்தப்படாத திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்? சமக்ர சிக்ஷா திட்டத்தில், மொத்தம் உள்ள 36 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 2024-25ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு நிதி வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது, தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப வெட்கமாக இல்லையா? என ஸ்டாலினை அண்ணாமலை கேட்டுள்ளார்.