நேபாளத்தில் உயிர் தப்பிய 370 மாணவர்கள், ஆசிரியர்கள்!
நேபாளத்தில் உயிர் தப்பிய 370 மாணவர்கள், ஆசிரியர்கள்!
UPDATED : செப் 01, 2026 09:42 AM
ADDED : செப் 01, 2026 09:43 AM
காத்மாண்டு:
நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது பள்ளியைக் கடந்து சென்ற அடையாளம் தெரியாத ஒருவர், 'பெரும் வெள்ளம் வருகிறது, ஓடுங்கள்...' என கத்திக் கொண்டே ஓடியதால் 370க்கும் மேற்பட்ட மாணவர்களும், அவர்களது ஆசிரியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் திரிசூலி ஆற்றில் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த சமயத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பெட்ராவதி பகுதியில் உள்ள உத்தர்காயா பள்ளியைக் கடந்து வேகமாக ஓடிவந்து, 'பெரிய வெள்ளம் வருகிறது, ஓடுங்கள்... தண்ணீர் வருகிறது...' என்று சத்தமாகக் கூச்சலிட்டு எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கையைக் கேட்ட சில நிமிடங்களிலேயே, ஆசிரியர்கள் மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். குழந்தைகள் தங்கள் பள்ளிப் பைகளைக்கூட எடுக்காமல், பள்ளிக்கு பின்னால் இருந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதியை நோக்கி ஓடினர்.
7 முதல் 10ம் வகுப்பு வரையிலான மூத்த மாணவர்கள் தாங்களாகவே ஓடினர்; இளைய குழந்தைகள் சேற்றில் நடந்து செல்ல ஆசிரியர்கள் உதவினர், அவர்களால் ஈடுகொடுக்க முடியாத போது சிலரைத் தங்கள் கைகளில் தூக்கிக்கொண்டு சென்றனர்.
அவர்கள் மலை ஏறிய சில நிமிடங்களிலேயே வெள்ள நீர் பள்ளியைச் சூழ்ந்தது. அந்த மனிதரின் உடனடி எச்சரிக்கை மட்டும் இல்லையென்றால், 370க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயிருக்கும். தற்போது 370க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் ஒரு மனிதரின் எச்சரிக்கையால் நூலிழையில் உயிர் தப்பினர்.
இவர்களில் ஒருவரான, எட்டாம் வகுப்பு மாணவி ரஷ்மி தமாங், மலை ஏறுவதில் ஏற்பட்ட சிரமத்தை நினைவு கூர்ந்தார். “எங்கள் உடல் முழுவதும் சேறு இருந்தபோதிலும் நாங்கள் எப்படியோ மேலே ஏறிவிட்டோம், ஆனால் பல குழந்தைகளால் ஓடக்கூட முடியவில்லை; அவர்களுக்கு ஆசிரியர்கள் உதவினர்,” என்றார்.
இதே போல் நேபாள வெள்ளத்தில் மற்றொரு சம்பவமாக, திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திர தாவடி என்பவருக்கு வந்த தொலைபேசி எச்சரிக்கையால், அவர் உடனடியாகச் செயல்பட்டு 1,643 பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பாக உயரமான இடங்களுக்கு அனுப்பி உயிர் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
