UPDATED : ஆக 07, 2026 10:09 AM
ADDED : ஆக 07, 2026 10:10 AM
புதுடில்லி:
ஒடிஷா மாநிலம் சந்திப்பூரில் இருந்து 'அக்னி 4' ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
தேசத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் அக்னி வரிசை ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றின் செயல்திறன் மற்றும் செயல்பாட்டு தயார் நிலையை உறுதி செய்வதற்காக, அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அணு ஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த 'அக்னி 4' ஏவுகணை நேற்று சோதனை செய்யப்பட்டது. ஒடிஷா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து நேற்று ஏவப்பட்டது.
இரண்டு கட்ட திட எரிபொருள் உந்துவிசை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, முந்தைய அக்னி வகைகளை விட எடை குறைவானது. சாலை வழியாக எடுத்துச் செல்லக்கூடியதுடன், தேவையான நேரத்தில் விரைவாக களமிறக்கும் வசதியும் கொண்டது.
“இது, ஏவுகணை அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டு தயார் நிலையை மீண்டும் உறுதி செய்யும் வழக்கமான பயனாளர் சோதனை தான். இதில், அனைத்து தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டது” என, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
