மாணவர்களிடம் ஆங்கில திறனை மேம்படுத்த 'லெவல் அப்' திட்டம்
மாணவர்களிடம் ஆங்கில திறனை மேம்படுத்த 'லெவல் அப்' திட்டம்
UPDATED : மே 20, 2025 12:00 AM
ADDED : மே 20, 2025 10:53 AM

சிவகங்கை:
அரசு பள்ளி மாணவர்களிடம் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த 'லெவல் அப்' திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் அடிப்படை திறனை மேம்படுத்தும் நோக்கில் திறன்கள் என்ற திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. தேசி அளவில் நடக்கும் நாஸ், ஏ.சி.இ.ஆர்., போன்ற கற்றல் அடைவு ஆய்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு ஏற்ற மொழி திறன்களை அடைவதில் குறைபாடு கொண்டிருப்பதாக சுட்டி காட்டப்படுகிறது. இதையடுத்து மாணவர்களின் ஆங்கில அடிப்படை மொழி திறனை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களின் மொழி திறன்களை வளர்க்க கற்பித்தல் நுட்பங்களை தாங்களே உருவாக்கி வகுப்பறைகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். அதனை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் மொழி திறன்களை வளர்க்கும் வகையில் சில ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் நுட்பங்களை பிற ஆசிரியர்கள் அறியும் வகையில் அவற்றை மொழி வள வங்கியாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர மாணவர்களின் மொழி திறன்களை மேம்படுத்த ஒரு புதிய முன்னெடுப்பாக 'லெவல் அப்' எனும் தன்னார்வ திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன் நோக்கம் 6 முதல் 8 ம் வகுப்பு வரையான மாணவர்கள் ஆங்கில மொழி வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படையை எளிதாக கற்றுக் கொள்ள வழிசெய்வதாகும். இதற்காக மாவட்டந்தோறும் பிரத்யேக வாட்ஸ் ஆப் குழு துவங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் வழிமுறைகள் தொடர்பான பதிவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். வரும் ஜூன் முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் அடைய வேண்டிய குறைந்தபட்ச மொழி திறன் இலக்குகளை நிர்ணயித்து இந்த குழு செயல்பட உள்ளது.