அரசு பள்ளி மாணவர்கள் 448 பேர் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி
அரசு பள்ளி மாணவர்கள் 448 பேர் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி
UPDATED : பிப் 21, 2026 03:08 PM
ADDED : பிப் 21, 2026 03:09 PM

சென்னை:
ஜே.இ.இ., முதல்நிலைத் தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் 448 பேர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
தமிழக அரசின் 'மாதிரிப் பள்ளி' திட்டத்தின் கீழ் படித்த, அரசு பள்ளி மாணவர்கள் 448 பேர், தேசிய அளவிலான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், திருவண்ணாமலை மாவட்ட மாணவர்களான பிரவீன் 99.53; நரேஷ் 99.50; ராணிப்பேட்டை மாணவர் வேல்முருகன் 99.42 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.
இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
'நிதிச் சுமை என்பது, மாணவர்களின் கனவுகளுக்கு ஒரு போதும் தடையாக இருக்கக் கூடாது' எனும் தமிழக அரசின் கொள்கையின்படி, கடந்த 2021ல் உருவாக்கப்பட்ட, மாதிரிப் பள்ளிகள் திட்டம், திறமையான மாணவர்களின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கிறது.
அந்த வகையில், தற்போது, 448 மாணவர்கள், ஜே.இ.இ., முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இது வரை, 39,044 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களில், 2,358 பேர், ஐ.ஐ.டி, தேசிய சட்டப் பல்கலை மற்றும் 'நிப்ட்' உள்ளிட்ட, 93 உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
அதன்படி, தமிழக அரசின் முழு நிதியுதவியுடன், 41 மாணவர்கள் ஐ.ஐ.டி.,களிலும், 17 மாணவர்கள் ஜப்பான், தைவான், மலேஷியா போன்ற வெளிநாட்டுப் பல்கலைகளிலும் படிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

