தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாது
தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாது
UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 07:46 PM

சென்னை:
தமிழகம் முழுதும், 18 வயதுக்கு மேலானவர்களில், எழுத, படிக்க தெரியாதவர்கள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதில், 5 லட்சம் பேருக்கு, அ, ஆ போன்ற தமிழ் எழுத்துகள் கூட தெரியவில்லை.
முறைசாரா கல்வி இயக்குனரகம் சார்பில், கிராமங்கள், நகரங்களில் எழுத்தறிவு பெறாதவர் விபரம் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கணக்கெடுப்பு
கடந்த கல்வியாண்டில், எழுத்தறிவு பெறாமல் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்து, அனைத்து மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், அ, ஆ என்ற தமிழ் எழுத்துகள் கூட எழுத, படிக்க தெரியாத நிலையில், 5 லட்சம் பேர் இருப்பது தெரியவந்துஉள்ளது. சென்னையில், 11,869 பேர் தமிழ் எழுத்துகள் தெரியாமல் உள்ளனர். அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில், 40,191 பேர் தமிழ் தெரியாமல் உள்ளனர்; அவர்களில், 29,176 பெண்கள்.
முதல் 10 மாவட்டங்களில், கிருஷ்ணகிரி, 33,020; மதுரை, 23,640; திருவண்ணாமலை, 23,423; கள்ளக்குறிச்சி, 21,857; ஈரோடு, 20,279; தர்மபுரி, 19,983; கோவை, 18,725; திண்டுக்கல், 18,500; விழுப்புரம், 16,744 பேர், தமிழ் எழுத, படிக்க தெரியாமல் உள்ளனர். இவர்களில், 18 வயது பூர்த்தியான இளைஞர், இளம்பெண்களும் உள்ளனர்.
2,797 பேர்
இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மிகக் குறைந்த அளவில், 2,797 பேர் உள்ளனர். கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்குப் பின், 4.80 லட்சம் பேரும் தமிழ் எழுத, படிக்க பயிற்சி அளிக்கப்பட்டுஉள்ளது.
இன்னும், 2 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களையும் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக மாற்ற, விரைவில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என, முறைசாரா கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.