50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சூப்பர் எல் நினோ நிகழ்வு: வானிலை ஆய்வாளர்கள் தகவல்
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சூப்பர் எல் நினோ நிகழ்வு: வானிலை ஆய்வாளர்கள் தகவல்
UPDATED : ஏப் 06, 2026 09:58 AM
ADDED : ஏப் 06, 2026 10:00 AM

சென்னை:
'பசிபிக் பெருங்கடலில், 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 'சூப்பர் எல் நினோ நிகழ்வு' காரணமாக, தென்மேற்கு பருவமழை குறைந்து விடும் வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கடலில் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகள் அடிப்படையிலேயே, பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்த வகையில், பசிபிக் பெருங்கடலில் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் வெப்பம் இயல்பை விட அதிகமாவது, 'எல் நினோ' என்றும், வெப்பநிலை குறைவது, 'லா நினா' என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
வெப்பநிலை மாற்றம் இந்நிலையில், தற்போது நிலவும் லா நினா நிகழ்வு வலுவிழந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு எல் நினோ ஏற்படுவதற்கும், அதன் அடிப்படையில் இந்திய பெருங்கடலில், ஐ.ஓ.டி., எனப்படும் வெப்பநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை துறை சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது:
பசிபிக் பெருங்கடலில் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்பநிலை உயர்வதை குறிக்கும் எல் நினோ, வரும் அக்., - நவ., மாதங்களில் உருவாக உள்ளது.
இதில், இயல்பாக ஏற்படும் எல் நினோ சமயத்தில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். ஆனால், தற்போது 50 ஆண்டுகளுக்கு பின், சூப்பர் எல் நினோ உருவாக உள்ளதால், கடலில் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
இதனால், இந்திய பெருங்கடலில் சுமத்ரா தீவுகள் முதல், சோமாலியா வரையிலான பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில், ஐ.ஓ.டி., என்ற முறையில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தண்ணீர் வரத்து நடப்பாண்டு அக்., - நவ., மாதங்களில் இந்த நிகழ்வு உருவானால், அடுத்த ஆண்டு முதல், தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் மழை பொழிவு வெகுவாக குறையும். இதனால், தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதே சமயம், வடகிழக்கு பருவ காலத்தில், 2015ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக மழை பொழியவும் வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வு காரணமாக, 2027 முதல் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு வறட்சி போன்ற பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
