அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,க்கு 6, யு.கே.ஜி.,க்கு 7, முதல் வகுப்புக்கு 8
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,க்கு 6, யு.கே.ஜி.,க்கு 7, முதல் வகுப்புக்கு 8
UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM
ADDED : ஜூலை 15, 2024 09:58 AM
பெங்களூரு:
அரசு பள்ளி சேர்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு எல்.கே.ஜி.,க்கு ஆறு; யு.கே.ஜி.,க்கு ஏழு; முதல் வகுப்புக்கு எட்டு வயது என நிர்ணயித்து, கர்நாடக அரசாணைபிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் தங்கள் குழந்தைகளை இரண்டரை அல்லது மூன்று வயதுக்குள் நர்சரியில் சேர்த்துவிடுகின்றனர். இதனால், விளையாட வேண்டிய வயதில், குழந்தைகள் பாடம் படித்து வருகின்றனர்.
மத்திய கல்விதுறையின் உத்தரவின்படி, கடந்த 2022 ஜூலை 26ல், '2023 - 24ம் கல்வியாண்டில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மற்றும் முதல் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் வயது ஜூன் 1ம் தேதியன்று, குறைந்தபட்சம் நான்கு, ஐந்து, ஆறாக இருக்க வேண்டும் என கர்நாடக கல்வித் துறை உத்தரவிட்டது.
இது பெற்றோரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் இரண்டு ஆண்டுகள் மாநில அரசு விலக்கு அளித்தது.
இதைத் தொடர்ந்து, 2022 நவம்பரில், பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், '2025 - 26 முதல் எல்.கே.ஜி.,யில் சேர்க்கும் மாணவர்களுக்கு அதிகபட்சம் ஆறு வயது முடிவடைந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், டி.டி.பி.ஐ., எனும் பொது உத்தரவு கமிஷனர் காவேரி கூறியதாவது:
அதிகபட்ச வயது வரம்பை அமல்படுத்தினால், படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். எனவே தான் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., முதலாம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கும் முன்மொழி சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட அரசு, '2025 - 26ம் ஆண்டு முதல் எல்.கே.ஜி.,க்கு ஆறு, யு.கே.ஜி.,க்கு ஏழு, முதலாம் வகுப்புக்கு எட்டு வயது என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது' என அரசாணை பிறப்பித்துள்ளது.