கிராமங்களில் தொழில்முனைவோர் 6 சதவீதம் உயர்வு; பயிற்சி பெற்று தொழில் துவக்கம்
கிராமங்களில் தொழில்முனைவோர் 6 சதவீதம் உயர்வு; பயிற்சி பெற்று தொழில் துவக்கம்
UPDATED : ஆக 30, 2026 11:07 AM
ADDED : ஆக 30, 2026 11:12 AM

கோவை:
கிராமப்புறங்களில் தொழில்முனைவோர் எண்ணிக்கை, ஆண்டுக்கு சராசரியாக 4 முதல் 6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், வங்கிகள் மற்றும் மாநில அரசுடன் இணைந்து ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
2024 - 2025 மற்றும் 2025 - 2026 நிதியாண்டுகளில் தொழில் பயிற்சி பெற்றவர்களில் பலர், சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர்.
இங்கு 1 முதல் 6 வாரங்கள் வரையிலான குறுகிய கால தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. பெரியநாயக்கன்பாளையத்தில் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 19 முதல் 45 வயது வரையிலான, பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
2024 - 2025 நிதியாண்டில் 1,002 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டதில், 858 பேர்; 2025 - 2026 நிதியாண்டில் 1,069 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 698 பேர் சுய தொழில் துவங்கியுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ஒருவருக்கு வழங்கப்படும் பயிற்சியைப் பொறுத்து, தோராயமாக ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை செலவு செய்யப்படுகிறது. பயிற்சி முடித்தவர்கள் தொடர்ந்து என்ன செய்கிறார்கள் என்பதையும் கண்காணித்து வருகிறோம். இது வரை 1,638 பேரை கண்காணித்து, சுயதொழிலை தொடர்ந்து செய்ய ஊக்குவித்துள்ளோம்' என்றனர்.
என்னென்ன பயிற்சி?
தேர்வு செய்யப்படுவோருக்கு சணல் பொருட்கள் தயாரித்தல், மொபைல் போன் பழுதுபார்த்தல், சி.சி.டி.வி., கேமரா பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல், காளான் வளர்ப்பு, வீடுகளுக்கான மின் வயரிங், புகைப்படங்களுக்கு பிரேம் செய்தல், லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங், கைவினை ஆபரணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
