தேசிய தேர்வு முகமையின் வினாத்தாள் குழுவில் 600 நிபுணர்கள் நீக்கம்
தேசிய தேர்வு முகமையின் வினாத்தாள் குழுவில் 600 நிபுணர்கள் நீக்கம்
UPDATED : ஆக 19, 2026 07:30 PM
ADDED : ஆக 19, 2026 07:34 PM
புதுடில்லி:
தேசிய தேர்வு முகமையின் வினாத்தாள் குழுவை சீரமைக்கும் வகையில் 600 நிபுணர்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், புதியவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசு நடத்தும் தேர்வு தொடர்பான சமீபத்திய பிரச்னைகளைத் தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, உயர்கல்வித்துறை அமைச்சர், தேசிய தேர்வு முகமையின் இயக்குனர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தேர்வு தொடர்பான பிரச்னைகளைத் தொடர்ந்து என்.டி.ஏ., எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், இதுவரை என்.டி.ஏ.,வில் இருந்து 50 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வகையில் பணியாளர் நியமனங்கள் நடந்து வருவதாகவும் தேசியத் தேர்வு முகமை தெரிவித்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து என்.டி.ஏ., அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்றும் ஆலோசனை நடத்தினார். இதில், தேர்வுகளை சுமூகமாக நடத்த தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்தும்படி அமைச்சர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இக்கூட்டத்தில், தேர்வுக்குழுவை சீரமைக்கும் வகையில் 500 நிபுணர்கள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வினாத்தாள் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், நான்கு அடுக்கு வினாத்தாள் சோதனை அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைப்பில், அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் 20 முதல் 25 அதிகாரிகள் சேர்க்கப்படுவார்கள். இன்னும் அதிகாரிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
என்.டி.ஏ., அலுவலகம் புதிய அலுவலகத்திற்கு போர்க்கால அடிப்படையில் மாற்றம் செய்யப்படும். அங்கு சி.ஐ.எஸ்.எப்., அமைப்பு வீரர்கள் வாயிலாக பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அமைச்சரிடம் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.
