UPDATED : ஜன 24, 2026 10:47 AM
ADDED : ஜன 24, 2026 10:50 AM

சென்னை: தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி., எனும் சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில், 2010ம் ஆண்டில் இருந்து, 'அரோரா' எனும் பெண்களுக்கான கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், நடப்பாண்டு நிகழ்ச்சி, கடந்த 19ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடந்தது.
பிரேசில் எழுத்தாளர் பாலோ கோயல்ஹோ எழுதிய, 'தி அல்கெமிஸ்ட்' நுாலை மையமாக வைத்து, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில், தமிழகம் முழுதும் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்று, பேச்சு போட்டி, கவிதை எழுதுதல், ஹேக்கத்தான், பேஷன் ஷோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக , தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு கழக பொது மேலாளர் விஜயலட்சுமி, சினிமா இயக்குநர் வர்ஷா பரத், எம்.சி.சி., கல்லுாரி முதல்வர் வில்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
எம்.சி.சி., கல்லுாரி மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஜனனி கூறியதாவது:
சமூகம் பெண்கள் மீது திணிக்கும் போலியான எதிர்பார்ப்புகளையும், 'நான் போதுமானவள் அல்ல' என்ற அழுத்தத்தையும் உடைப்பதே, நடப்பாண்டு அரோரா நிகழ்ச்சியின் நோக்கமாக அமைந்தது. பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.

