UPDATED : மே 23, 2024 12:00 AM
ADDED : மே 23, 2024 10:40 AM

கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், நடப்பு கல்வியாண்டில் 779 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தொழில்நுட்ப ரீதியிலான கற்றல் முறையை விரிவுபடுத்தும் வகையில், கோவை கல்வி மாவட்டத்துக்கு ஆயிரத்து 757 மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு, ஆயிரத்து 114 என மொத்தம் 2 ஆயிரத்து 871 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 210 பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.
232 மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கும் பணி, 779 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வழங்கும் பணி ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.