ஆர்.டி.இ., கட்டணம் இழுத்தடிப்பால் 7800 பள்ளிகள் போராட்ட அறிவிப்பு
ஆர்.டி.இ., கட்டணம் இழுத்தடிப்பால் 7800 பள்ளிகள் போராட்ட அறிவிப்பு
UPDATED : நவ 10, 2025 09:47 AM
ADDED : நவ 10, 2025 09:56 AM

மதுரை:
மத்திய அரசு வழங்கிய ஆர்.டி.இ., தொகையை வழங்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசை கண்டித்து பாதிக்கப்பட்ட 7800 தனியார் பள்ளிகள் நவ.12ல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,) தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்பில் 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை கட்டணத்தை மத்திய அரசு வழங்குகிறது. இதன்படி 4.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் ஆர்.டி.இ., நிதியை மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவால் அதற்கான நிதியை மத்திய அரசு வழங்கியது. ஒருமாதத்திற்கும் மேல் ஆன நிலையில் பள்ளிகளுக்கு அந்த நிதியை தமிழக அரசு இதுவரை விடுவிக்கவில்லை.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு (பெப்சா) மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:
தமிழகத்தில் 2023-24, 2024-25 ஆகிய 2 ஆண்டுகளுக்கான ஆர்.டி.இ., கட்டணம் கிடைக்காததால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பல பள்ளிகள் மூடப்பட்டன. கடன் சுமை, மனஉளைச்சலால் பல பள்ளித் தாளாளர்கள் உயிரிழந்துவிட்டனர். கடனுக்காக பள்ளிகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு விடுவித்தும் மாநில அரசு இதுவரை பள்ளிகளுக்கு நிதி வழங்கவில்லை.
இதைக் கண்டித்து, தமிழ க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நவ.12ல் மாநிலத்தில் 7800 தனியார் பள்ளிகளிலும் கறுப்பு கொடியேற்றியும், ஆசிரியர்கள், அலுவலர்கள் கறுப்பு பட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்றார்.

