வெளிநாட்டுக் கல்வியை கணினி மூலம் வழங்கும் திட்டம் நுாற்றாண்டு நுாலகத்தில் விரைவில் அறிமுகம்
வெளிநாட்டுக் கல்வியை கணினி மூலம் வழங்கும் திட்டம் நுாற்றாண்டு நுாலகத்தில் விரைவில் அறிமுகம்
UPDATED : ஜூன் 01, 2024 12:00 AM
ADDED : ஜூன் 01, 2024 08:49 AM

மதுரை:
வெளிநாட்டுக் கல்வியை கணினி மூலம் வழங்கும் திட்டம் மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்நுாலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்ட நிறைவு விழா நடந்தது. முதன்மை நுாலகர் தினேஷ் குமார் வரவேற்றார். பொது நுாலக இயக்குநர் இளம்பகவத், போட்டிகள், பயிற்சிகளில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அவர் பேசியதாவது:
நுாலகத்திற்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடிய பொறுப்பு பெற்றோரிடமே உள்ளது. புத்தகங்களுடன் மட்டு மின்றி, மற்ற குழந்தைகளோடு பழகும் வாய்ப்பும், சமூகத்தில் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதை கற்கும் இடமாகவும் நுாலகம் உள்ளது.
குழந்தைகள் மேம்பாட்டுக்காகவும், பெரியோர்கள், இளைஞர்கள், போட்டித் தேர்வு மாணவர்களுக்கு என பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து கணினி மூலம் கல்வி கற்கும் திட்டம் விரைவில் இங்கு செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இளைஞர்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நுாலகங்கள் புத்தகங்களை படிக்கும் இடமாக மட்டுமின்றி திறன்களை வளர்க்கும் இடமாகவும் மாறி வருகிறது என்றார்.
அமெரிக்கன் கல்லுாரி தமிழ்ப் பேராசிரியர் பிரபாகரன், ஆசிரியர்கள் சிவா, சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் சந்தான கிருஷ்ணன் நன்றி கூறினார்.