UPDATED : ஜூன் 27, 2024 12:00 AM
ADDED : ஜூன் 27, 2024 08:28 AM
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களை, மன்றங்கள் மூலம் தொன்மை சின்னங்களை பார்வையிட அழைத்துச்செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகனிடம் அளித்துள்ள
கோரிக்கை மனு:
விழுப்புரம் மாவட்டம், வரலாற்றில் பிரபலமான மாவட்டமாகும். பலகோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதில் இருந்து, அண்மைக்காலம் வரையிலான வரலாற்றுத் தடயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.
இந்த தடயங்கள், அனைத்து தாலுகாவிலும் காணப்படுகின்றன. உலக வரலாற்றை அறிந்துகொள்ளும் அதே வேளையில், தமக்கு அருகாமையில் உள்ள வரலாறு குறித்த விழிப்புணர்வும் மாணவர்களிடையே ஏற்படுவது அவசியமாகும்.
இதற்கு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தொன்மை பாதுகாப்பு மன்றங்கள், வரலாற்று மன்றங்கள் முக்கிய பங்காற்றலாம். எனவே, இம்மன்றங்கள் சிறப்பான வகையில் செயல்பட வேண்டும். மாணவர்களின் வரலாற்று அறிவினை மேம்படுத்தவும், தொன்மைத் தடயங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யவும், இம்மன்றங்கள் உதவும்.
மாவட்டத்தில் பயிலும் மாணவர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வரலாறு மற்றும் தொன்மைத் தடயங்களை நேரில் சென்று பார்ப்பதற்காக, 3 மாதங்களுக்கு ஒரு முறை வரலாற்று சுற்றுலாவிற்கு, கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இத்தகைய பயணங்கள் மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்த உதவும். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.