UPDATED : பிப் 09, 2026 10:55 PM
ADDED : பிப் 09, 2026 10:57 PM

புதுடில்லி:
நாடு முழுதும், 83,000 பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடி மாணவர்களுக்கு, 'கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு' இயக்கத்தின் கீழ், பயோமெட்ரிக் விபரங்களை வெற்றிகரமாக புதுப்பித்து, ஆதார் அடையாள அட்டையை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சாதனை படைத்துள்ளது.
ஆதார் அடையாள அட்டையை யு.ஐ.டி.ஏ.ஐ., வழங்கி வருகிறது. மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள், ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன.
அவசியம்
இவை, மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படுவதால், அனைத்து மாணவர்களும் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து, பயோமெட்ரிக் எனப்படும் கைவிரல் பதிவு, கண் விழித்திரை விபரங்களை புதுப்பிப்பது அவசியமாகிறது.
அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக, கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு என்ற இயக்கத்தை, நாடு முழுதும் கடந்த ஆண்டு செப்டம்பரில் யு.ஐ.டி.ஏ.ஐ., துவங்கியது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு கடிதம் எழுதிய யு.ஐ.டி.ஏ.ஐ., தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார், பள்ளிகளில் சிறப்பு முகாம்களை நடத்த ஆதரவு கோரினார்.
கட்டணம் ரத்து
இந்நிலையில், கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு இயக்கத்தின் கீழ், நாடு முழுதும், 83,000 பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடி மாணவர்களுக்கு பயோமெட்ரிக் விபரங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாக யு.ஐ.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
மாநில கல்வித் துறைகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த மாபெரும் பணியை செய்துள்ளனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 7 - 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பயோமெட்ரிக் புதுப்பிப்பு கட்டணத்தை, வரும் அக்., 1 வரை யு.ஐ.ஏ.டி.ஐ., ரத்து செய்துள்ளது.
மேலும், 5 - 7 வயது மற்றும் 15 - 17 வயது வரையிலான மாணவர்களுக்கு இந்த புதுப்பிப்பு, ஏற்கனவே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் நடக்கும் முகாம்கள் தவிர, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள ஆதார் சேவை மையங்களுக்கு அழைத்து சென்றும் இப்பணியை மேற்கொள்ளலாம்.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், 1.3 கோடி மாணவர்கள் இந்த மையங்களில் தங்கள் விபரங்களை புதுப்பித்துள்ளனர்.
புதுப்பிப்பு ஏன் அவசியம்?
ஆதார் எடுக்கும் போது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யப்படுவதில்லை. 5 வயது மற்றும் 15 வயதை கடக்கும் போது, குழந்தைகளின் உடல் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்வது அவசியம். பயோமெட்ரிக் புதுப்பிக்கப்படாவிட்டால், அரசு நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும். 'நீட், ஜே.இ.இ., க்யூட்' போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் மற்றும் பல்கலை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, துல்லியமான ஆதார் விபரங்கள் மிகவும் அவசியம்.

