பள்ளி மாணவர்களிடம் அரசியல் நடிகர் விஜய்க்கு ஏ.பி.வி.பி., அமைப்பு கண்டனம்
பள்ளி மாணவர்களிடம் அரசியல் நடிகர் விஜய்க்கு ஏ.பி.வி.பி., அமைப்பு கண்டனம்
UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM
ADDED : ஜூலை 08, 2024 08:21 AM
மதுரை:
தனது அரசியல் செல்வாக்கை உயர்த்த பள்ளி மாணவர்களிடம் நடிகர் விஜய் அரசியல் பேசுகிறார் என ஏ.பி.வி.பி., அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அகில பாரதியவித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு மாநில இணை செயலாளர் விஜயராகவன்வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பள்ளி மாணவர்கள் மீது அக்கறையாக அறிவுரை வழங்குவதாக தெரிவித்து தனது அரசியல் செல்வாக்கை உயர்த்துவதற்கு, நடிகர் விஜய் பேச்சால் மாணவர்களுக்கு தவறான கருத்துக்களை கூறுவதை ஏ.பி.வி.பி., கண்டிக்கிறது.
அரசியல் சூழ்ச்சி தெரியாத பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்தும், தமிழினம், ஒன்றிய அரசு என்றும் அரசியல் பேசி மாணவர்களிடையே வன்முறையை துாண்டுகிறார்.
நீட் தேர்வின் காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவதுடன் அதிகப்படியான ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் கடினமான முயற்சியால் மாணவர்களை தயார் செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பினை பெறுவதற்கான வாய்ப்பினை நீட் தேர்வு வழங்குவதால் தான் எங்கள் அமைப்பு வரவேற்கிறது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வினை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் நடிகர் விஜய்யும் சேர்ந்து விட்டார்.
சாதாரண பள்ளி மாணவர்களிடம் தனது திரைப்பட கவர்ச்சியால் உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து மாணவர்களை தவறாகதிசை திருப்புவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.