வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை
வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை
UPDATED : ஜன 13, 2025 12:00 AM
ADDED : ஜன 13, 2025 02:56 PM

புதுடில்லி:
நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் வளர்ந்த நாடாக உருவெடுப்போம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லியில் நடந்த வளர்ந்த பாரதத்தின் இளம் தலைவர்களின் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
நாம் வளர்ந்த பாரதமாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கு சிலருக்கு கடினமானதாக தெரிய லாம்; ஆனால், அது சாத்தியமற்றது அல்ல. நம் இளம் தலைமுறையின் எண்ணிக்கையையும், பலத்தையும் வைத்து பார்க்கும்போது, நம் நாடு வளர்ந்த பாரதமாக உருவெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
ஒரு நாடு முன்னேற, பெரிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். அதை தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பை, 2030க்குள் 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே நாம் அதை அடைந்து விடுவோம். அரசால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.
இளைஞர்களும் அதில் பங்களிக்க வேண்டும். வளர்ந்த பாரதம் என்ற இலக்கு, மோடிக்கு மட்டும் சொந்தமானது அல்ல; இளைஞர்களும் அதில் பங்கேற்க வேண்டும். லட்சிய இலக்குகளை அடைவதற்கு, தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் தீவிர பங்கேற்பும், கூட்டு முயற்சியும் தேவை.
வரும் 2047 வரையிலான அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலம். இந்த கால கட்டத்தில் வளர்ந்த பாரதம் என்ற கனவை, நம் இளைய தலைமுறையினர் நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
எல்லா பிரச்னைகளுக்கும் இளைஞர்களிடம் தீர்வு இருக்கும் என சுவாமி விவேகானந்தர் நம்பினார். அந்த கருத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.