UPDATED : மார் 13, 2026 01:40 PM
ADDED : மார் 13, 2026 01:43 PM

பந்தலுார்:
'இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
கூடலுார் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதியில் செயல்படும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜீன்பூல் தாவரவியல் மையத்தில், நடந்த நிகழ்ச்சிக்கு கூடலுார் வன அலுவலர் தேவராஜ் தலைமை வகித்து பேசுகையில், “இயற்கையை பாதுகாப்பதன் மூலம், அனைத்து உயிர்களும் வாழ வழி கிடைக்கும். வனம் மற்றும் வன விலங்குகள் மீதான, தவறான புரிதல்களை மாணவ சமுதாயம், முழுமையாக அறிந்து கொண்டு அதற்கேற்ப இயற்கையையும், வனங்களையும் பாதுகாக்க முன் வந்தால் மட்டுமே, எதிர்காலத்தில் இயற்கையை பாதுகாக்க முடியும். பிளாஸ்டிக் கழிவுகளை வனத்தில் போடுவதை தவிர்க்க வேண்டும்,” என்றார்.
தேவாலா அரசு பழங்குடியினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பந்தலுார் ஆரம்பப் பள்ளி, கூவமூலா ஆரம்பப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். வனச்சரகர் சஞ்சீவி, வனவர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

