UPDATED : செப் 19, 2024 12:00 AM
ADDED : செப் 19, 2024 08:57 AM
வில்லியனுார்:
வில்லியனுார் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி சேர்க்கை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதாக துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக பகுதியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவியர் விடுதி இயங்கிவந்தது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மாணவியர் விடுதி மூடப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவியர் விடுதி இதுநாள் வரையில் செயல்படாமல் உள்ளது.
மாணவியர் விடுதியை திறந்து தொடர்ந்து செயல்பாட்டுக்கு கொண்ட வரவேண்டும் என பெற்றோர்கள், மாணவிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் துறை இயக்குனர் இளங்கோவன், மாணவியர் விடுதியை பார்வையிட்டு, பாழடைந்து உள்ள விடுதியை நவீன படுத்தி புரணமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் மாணவியர் விடுதி புரணமைக்கும் பணியை ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து 6ம் வகுப்பு முதல் கல்லுாரி மாணவிகள் வரையில் இந்த விடுதியில் தங்கி படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, இதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஆதி திராவிட நலத்துறையில் வழங்கப்பட்டு வருவதாகவும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியர்கள் அதனை பயன்படுத்திகொள்ளலாம் என தெரிவித்தார்.

