UPDATED : மார் 03, 2026 11:20 AM
ADDED : மார் 03, 2026 11:23 AM

அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசு வழங்கும் சலுகைகள், ஊக்கத்தொகை குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளை பொறுத்த வரை, கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதம் பள்ளி திறக்கும் நாளில் தான் மாணவர் சேர்க்கை நடக்கும். ஆனால், 2024ம் ஆண்டு முதல், மார்ச் மாதம் முதலே மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கப்பட்டது, பெற்றோரிடம் போதிய வரவேற்பு பெற்றது. நடப்பாண்டும், அரசுப் பள்ளிகளில் மார்ச் 2ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்கியது.
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும், காலை உணவு திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல நலத்திட்டங்கள், உதவித்தொகை குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விழிப்புணர்வு பேரணி
இது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளி வாரியாக, 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் குறித்து ஏற்கனவே எடுத்துள்ள கணக்கெடுப்பை உறுதி செய்ய வேண்டும். பதிவேட்டில், ஐந்து வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும், முதல் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை, பொதுமக்கள் அறிய, பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக, மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
அரசுப் பள்ளியில், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் மற்றும் வழிப்பிரிவு, நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதையும், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சார்ந்தும், ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறி, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.
முன்னுரிமை
அரசுப் பள்ளியில் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணியில், 20 சதவீதம் முன்னுரிமை, 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை, பெண் கல்வி இடை நிற்றலை தடுக்க, மாணவியர்களுக்கு உயர் கல்வி படிக்க, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என, இது போன்ற முன்னுரிமைகளை ஆசிரியர்கள் எடுத்து கூறி, சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
மாதிரி பள்ளிகள், உண்டு, உறைவிட பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வாயிலாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும், பள்ளி கல்வித்துறை வழங்கிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.

