UPDATED : ஏப் 26, 2026 12:24 PM
ADDED : ஏப் 26, 2026 12:25 PM
விழுப்புரம்:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் 2026-27ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார், சுயநிதி பள்ளிகளில் துவக்க நிலை வகுப்புகளுக்கான (எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு 2026-27ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் மே 18ம் தேதி வரை அதிகாரப்பூர்வமாக நடக்கிறது.
சம்மந்தப்பட்ட பள்ளிக்கு 1 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவானோர் மற்றும் நலிவடைந்த குழுக்களைச் சேர்ந்த தகுதியுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களான குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் பெற்றோருக்கான ஆதார் மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றை மே 18ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மே 22ம் தேதி தேவைப்பட்டால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
