தவறான தகவல்களுடன் விளம்பரம்: ஐ.ஏ.ஏஸ்., பயிற்சி மையத்திற்கு அபராதம்
தவறான தகவல்களுடன் விளம்பரம்: ஐ.ஏ.ஏஸ்., பயிற்சி மையத்திற்கு அபராதம்
UPDATED : ஆக 19, 2024 12:00 AM
ADDED : ஆக 19, 2024 10:16 PM
புதுடில்லி:
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்களை திசை திருப்பும் வகையில், தவறான தகவல்களுடன் விளம்பரம் வெளியிட்ட ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்திற்கு, 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லி, புனே உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வரும் ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் சமீபத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
இதில், 2022ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் எங்கள் பயிற்சி மையத்தில் படித்த 200க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், நாங்கள் தான் இந்தியாவின் நம்பர் 1 ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி மையம் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இந்த விளம்பரங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்களை திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து விசாரணை நடத்திய மத்திய அரசு, பயிற்சி மையம் தவறான தகவல்களை வெளியிட்டதை கண்டறிந்தது.
இது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறும் செயல் எனக் குறிப்பிட்டு, பயிற்சி மையத்தின் மீது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சமீபகாலமாக மாணவர்களை கவரும் வகையில் விளம்பரங்கள் வாயிலாக தவறான தகவலை பல்வேறு பயிற்சி நிறுவனங்களும், கல்வி அமைப்பினரும் வெளியிட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், டில்லி ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் வெளியிட்ட விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, 2022ல் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்த பயிற்சி மையத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற நபர்கள் 171 பேர் மட்டுமே. ஆனால், விளம்பரத்தில் 200க்கும் மேற்பட்டோர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 102 பேர், இந்த மையத்தில் இலவச நேர்காணல் பயிற்சி மட்டுமே மேற்கொண்டனர். பெரும்பாலானவர்கள் ஏற்கனவே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த பயிற்சி மையத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.