போட்டி தேர்வுகளுக்கு தயாராக கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை
போட்டி தேர்வுகளுக்கு தயாராக கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை
UPDATED : மார் 05, 2026 02:57 PM
ADDED : மார் 05, 2026 03:00 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) காயத்ரி தேவி வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் முன்னிலை வகித்தார்.
துணை கலெக்டர் (பயிற்சி) சவுமியா தலைமை வகித்து பேசியதாவது:
கல்லுாரியில் பயிலும் போதே போட்டி தேர்வு களுக்கு நாம் தயாராக வேண்டும். குறிப்பாக கடினமான தேர்வுகளை நாம் எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., தேர்வுகளுக்கு யு.பி.எஸ்.சி., தேர்வுகள் நடத்தப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது. நம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவியர் தங்களது தனித்திறன்களை, தன்னம்பிக்கையுடன் வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, தனிமனித மேம்பாட்டு திறன் பயிற்சியாளர் நிமலன் மரகதவேல் பயிற்சி அளித்தார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஷெரியா நன்றி கூறினார்.

