UPDATED : ஏப் 26, 2025 12:00 AM
ADDED : ஏப் 26, 2025 09:56 AM

சென்னை:
கோடை விடுமுறையில் குழந்தைகளை நூலகம் சென்று படிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறிக்கை:
பள்ளி விடுமுறை நாட்களில், மாணவர்களின் பாதுகாப்புக்காக, பெற்றோர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முக்கியமாக, கடல், ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில், மாணவர்கள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம்.
கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை, வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.
பாரம்பரிய முறையில், தயாரிக்கப்பட்ட நல்ல உணவு, பழங்களை கொடுங்கள். நல்ல இசை கேட்பதை ஊக்குவித்தால், மனநலன் மேம்படும். டிவி, மொபைல் போன்களை பார்ப்பதற்கு நேரம் செலவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அவர்களை அருகில் உள்ள பொது நுாலகங்களுக்கு அழைத்துச் சென்று, தினமும் ஒரு மணி நேரமாவது, காமிக்ஸ், பொது அறிவு, சிறார் நீதிக்கதைகள், தலைவர்களின் வரலாற்று புத்தகங்களை படிக்க வையுங்கள்.
தாத்தா, பாட்டி உள்ள வீடுகளில், அவர்களுடன் சேர்ந்து உணவருந்தவும், அவர்களை மதிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

