UPDATED : ஜூன் 18, 2024 12:00 AM
ADDED : ஜூன் 18, 2024 08:22 AM
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளில் இலவச கல்வித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று, பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் ரூபா தெரிவித்தார்.
பாரதியார் பல்கலையில் இலவச கல்வித் திட்டம் கடந்த, 2006ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டதால் 2017ம் ஆண்டு இத்திட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, 2022-23ம் கல்வியாண்டில் ஒரு கல்லூரிக்கு, 15 மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
கல்லூரியில், துறைக்கு தலா, 3 பேர் என, 15 பேர் இத்திட்டத்தின்கீழ் சேர்த்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாக பல்கலையின்கீழ் உள்ள கல்லூரிகளில் சுமார் 1,500 மாணவர்கள் இலவச கல்வி பெற முடியும்.
முதலாமாண்டு சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில் நல்ல மதிப்பெண் பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து, பல்கலைக்கழகப் பதிவாளர் ரூபா கூறுகையில், இலவச கல்வித் திட்டம் குறித்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சேர்க்கை அதிகமாக உள்ள கல்லூரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளில் இத்திட்டத்தை அமல்படுத்த கட்டாயப்படுத்துவதில்லை என்றார்.
விழிப்புணர்வு தேவை!
இத்திட்டம் அனைத்துக் கல்லூரிகளிலும் அமல் படுத்தப்படுகிறதா என்பது குறித்து முறையான ஆய்வு செய்யப்படுவதில்லை. அதேபோல, இத்திட்டம் இருப்பது பல அதிகாரிகளுக்கும், மாணவர்கள், பெற்றோருக்கும் தெரிவதில்லை. இதுகுறித்து, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இலவச கல்வி ஏழை மாணவர்களைச் சென்றடையும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.