UPDATED : ஆக 21, 2026 04:14 PM
ADDED : ஆக 21, 2026 04:15 PM
சூலுார்:
'பொதுத்தேர்வை இலக்காக கொண்டு, மாணவர்கள் படிக்க ஊக்கமளிக்க வேண்டும்' என, பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. பி.டி.ஏ., தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
தலைமையாசிரியர் கண்ணன் பேசியதாவது:
மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது முக்கியமானது. அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகினால், உயர் கல்வியில் சேர எளிதாக இருக்கும். பள்ளியில் பயில மட்டுமில்லாமல், கல்லுாரியில் சேர்ந்து படிக்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாணவர்கள் வீட்டில் முறையாக படிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். விடுமுறை நாட்களில், வீணாக பொழுதை கழிக்காமல் படிக்க வலியுறுத்த வேண்டும்.
பொதுத் தேர்வை இலக்காக கொண்டு அதிக மதிப்பெண் பெற, பெற்றோர் ஊக்கமளிக்க வேண்டும். மாணவர்களின் உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும். மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க வழி காட்டுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
உதவி தலைமையாசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.
