நுாலகத்தை நாடினால் எதிர்காலம் வளமாகும் வாசகர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் அறிவுரை
நுாலகத்தை நாடினால் எதிர்காலம் வளமாகும் வாசகர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் அறிவுரை
UPDATED : ஜூலை 19, 2024 12:00 AM
ADDED : ஜூலை 19, 2024 09:06 AM
பந்தலுார்:
பந்தலுாரில் செயல்படும் நுாலகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, வாசகர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் புளோரா வரவேற்றார்.
நுாலகர் அறிவழகன் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் பள்ளியில் போதிக்கப்படும் பாடம் சார்ந்த புத்தகங்களை, படிப்பதன் மூலம் பள்ளி தேர்வுகளில் வெற்றி பெற முடியும். அதே நேரம் நுாலகத்தை நாடினால் அங்கு அறிவு சார்ந்த மற்றும் அரசு பொது தேர்வுகள், வேலைவாய்ப்பு தேர்வுகள் போன்றவற்றில் பங்கு ஏற்று, பயன்பெறும் வகையில் நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து பயன்பெறலாம். இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் வளமானதாக மாறும் என்றார்.
தொடர்ந்து, பள்ளியில் படிக்கும், 100 மாணவிகளுக்கு தனது சொந்த செலவில், வாசகர் கட்டணத்தை செலுத்தி சமூக ஆர்வலர் காளிமுத்து நுாலக வாசகர் அடையாள அட்டையை மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்.
மேலும், பள்ளி தாளாளர் ரோஸ்மேரி, தேவாலா ஜி.டி.ஆர்., பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன், கால்நடை டாக்டர் பாலாஜி, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், காந்தி சேவா மைய அமைப்பாளர் நவ்ஷாத், வாசகர் வட்ட நிர்வாகி முத்துக்குமார், நுாலக பணியாளர் அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தினால் கிடைக்கும் பயன்கள் குறித்து பேசினர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். நுாலகர் நித்திய கல்யாணி நன்றி கூறினார்.