வேலுார் வி.ஐ.டி., பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சங்க விழா
வேலுார் வி.ஐ.டி., பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சங்க விழா
UPDATED : ஜன 29, 2026 09:35 AM
ADDED : ஜன 29, 2026 09:36 AM
சென்னை:
வேலுார் வி.ஐ.டி., பல்கலையில், முன்னாள் மாணவர் சங்கத்தின் 31வது ஆண்டு விழா, நேற்று நடந்தது. இதில், கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவோர், சமூக மேம்பாடு ஆகியவற்றில் சாதனைப் படைத்த முன்னாள் மாணவர்களுக்கு, வேந்தரின் சிறந்த விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில், 'கவின்கேர்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ரங்கநாதன் பேசியதாவது:
வாழ்க்கையிலும், தொழிலிலும் வரும் சவால்களை எதிர்கொள்ளும் விதமே ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கிறது.
சவாலில் இறங்கி தீர்வு காண்பவரே வெற்றி பெறுகின்றனர். பின்வாங்கியோர், மேலும், பின்னடவை சந்திக்கின்றனர்.
நான், கடந்த 18 மாதங்களாக செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறேன். ஏ.ஐ., தவறுகள் செய்யும். அதை சவால் செய்து வாதிட வேண்டும்.
சிக்கல்களை தீர்ப்பது, வாய்ப்புகளை உருவாக்குவது, செயல்முறைகளை உருவாக்குவது ஆகியவை வெற்றிக்கான அடிப்படை கோட்பாடுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:
உலகிலேயே, நம் நாட்டில் வரி ஏய்ப்பு அதிகம் உள்ளது. வரி ஏய்ப்பில் கருப்பு பணம் அதிகமாக உள்ளது. இது, தேசிய நோயாக மாறிவிட்டது. இந்த சூழலில் இருந்து வெளியேறுவதற்கு, முன்னாள் மாணவர்கள் வழிகாட்ட வேண்டும்.
கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள வடஆற்காடு மாவட்டத்தில் வசிக்கும் 75 லட்சம் மக்களின் நிலையை மாற்ற அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையை துவங்கி, உதவி செய்து வருகிறோம்.
இதற்கு ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளமாக 96 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கி உள்ளனர். இது, நாட்டிற்கே முன் மாதிரியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், வி.ஐ.டி., பல்கலை துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, முன்னாள் மாணவர் சங்க இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

