பணி நீட்டிப்பும் இல்லை ஊதியமும் வழங்கவில்லை பரிதவிப்பில் அண்ணா பல்கலை உதவி பேராசிரியர்கள்
பணி நீட்டிப்பும் இல்லை ஊதியமும் வழங்கவில்லை பரிதவிப்பில் அண்ணா பல்கலை உதவி பேராசிரியர்கள்
UPDATED : பிப் 10, 2026 01:04 PM
ADDED : பிப் 10, 2026 01:07 PM

திண்டுக்கல்:
அண்ணா பல்கலையின் 16 உறுப்புக் கல்லுாரிகளில் பணியாற்றிய தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை, ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.
திண்டுக்கல் அண்ணா பல்கலையின் உறுப்புக்கல்லுாரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 16 உதவிப் பேராசிரியர்கள் கலெக்டர் சரவணனிடம் அளித்த மனு: அண்ணா பல்கலையின் கீழ் 16 உறுப்புக் கல்லுாரிகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. 2010ல் தற்காலிக பணியிடங்களில் ரூ.27,000 முதல் ரூ.30,000 ஊதியத்தில் 328 உதவிப் பேராசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டோம்.
திண்டுக்கல் அண்ணா பல்கலை உறுப்புக் கல்லுாரி வளாகத்தில் 16 பேர் பணிபுரிகிறோம். 2025 டிச., 31ல் பணிக்காலம் நிறைவடைந்தது. 5 நாட்கள் இடைவெளி விட்டு ஜன., 5ல் பணியில் சேர வேண்டும். பல ஆண்டுகளாக இதுவே நடைமுறை. ஆனால் எங்களுக்கான பணி நீட்டிப்பு இது வரை தரப்படவில்லை.
2010 முதல் 2025 வரை கற்பித்தல் பணிகளுடன் இணைந்து தேர்வு, நிர்வாகப் பணிகளையும் கவனித்து வந்தோம். தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் உறுப்புக் கல்லுாரிகளில் கற்பித்தல் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு 328 பேரையும் பணி நிரந்தரம் செய்து நிறுத்தப்பட்ட ஊதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

