UPDATED : பிப் 14, 2026 11:05 AM
ADDED : பிப் 14, 2026 11:09 AM
சிதம்பரம்:
அண்ணாமலை பல்கலையில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதன் இணைப்பு கல்லுாரியில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், சான்றிதழ் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் என பல்வேறு கட்டணத்தை, 60 சதவீதம் உயர்த்தியுள்ளது.
அதை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கு பல்கலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் உயர்த்திய அனைத்து கட்டணத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு பல்கலைக்கு நேற்று வந்தனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் கடலுார் மாவட்ட செயலாளர் சவுமியா தலைமையில், பல்கலை வாயிலில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலையில் ஒன்று கூடினர். அங்கிருந்து பேரணியாக பல்கலை நிர்வாக கட்டடத்திற்கு வந்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அறிவுடையநம்பி, மதியம் 1 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் பல்கலை நிர்வாக அலுவலக கட்டடத்தில் அனைத்து மாணவ மாணவிகளும் பதாகைகளுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
மாலை 5:00 மணி வரை மாணவர்களை அழைத்து சரியான பதில் கூறாததால் பல்கலைக்கழக பதிவாளர் அறையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து வரும், 25 ம் தேதி வரை, கால அவகாசம் வேண்டும் எனவும், அதற்கு பின், அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் சார்பில், உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

