UPDATED : ஏப் 10, 2024 12:00 AM
ADDED : ஏப் 10, 2024 10:24 AM

கோவை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், கோவையில் மூன்று மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கவுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி விரைவில் துவங்கவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்காக, கோவையில் கணபதி சி.எம்.எஸ்., பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி செண்பகம் மெட்ரிக் பள்ளி என மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கப்படும். இப்பணியில் ஈடுபடுவோர் பட்டியல் தயார்நிலையில் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.