பதில் சொல்; பரிசு வெல் தினமலர் மெகா வினாடி வினா போட்டி
பதில் சொல்; பரிசு வெல் தினமலர் மெகா வினாடி வினா போட்டி
UPDATED : செப் 07, 2024 12:00 AM
ADDED : செப் 07, 2024 11:23 AM

ஸ்ரீமுஷ்ணம் :
தினமலர் நாளிதழ் புதுச்சேரி பதிப்பின் இந்தாண்டிற்கான பதில் சொல்; பரிசு வெல் மெகா வினாடி - வினா போட்டி, கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
புதுச்சேரி, தமிழக பள்ளி மாணவர்களுக்காக தினமலர் - பட்டம் இதழ் சார்பில், பதில் சொல்; பரிசு வெல் என்ற தலைப்பில் வினாடி வினா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி பதிப்பு சார்பில் இந்த ஆண்டிற்கான போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 160 பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது.
இதனை, தினமலர் - பட்டம் இதழ், புதுச்சேரி ஆச்சாரியா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான போட்டி, ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தகுதி சுற்றாக முதல்நிலை தேர்வு நடந்தது. இதில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 600 மாணவர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு பொது அறிவு உட்பட 20 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது. அதிக, மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான வினாடி வினா போட்டி துவக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களான தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், அண்ணாமலை பல்கலைக்கழக, தொலைதுார கல்வி இயக்குனர் ஸ்ரீநிவாசன், ஆச்சாரிய உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஞான அபிராமி செந்தில், ெஹச்.ஓ.சி., அஷ்வினி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, 16 மாணவர்களும் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி வினா போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. 8 அணியினருக்கும் சாய்ஸ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதன்பின், அனைத்து அணியினருக்கும் பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டு, அதில், முதலில் பதில் சொல்லும் அணிக்கு, மதிப்பெண் தரப்பட்டது.
சவாலான கேள்விகளை அசத்தலாக எதிர்கொண்டு, மாணவர்கள் பதில் அளித்தனர். இறுதியில், பிளஸ் 1 மாணவர்கள் தரனேஷ், ரிச்சட் சாமுவேல் அணி 20 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியது.
பிளஸ் 2 மாணவி பிரஹதி, பிளஸ் 1 மாணவி பிரியதர்ஷினி அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இவ்விரு அணிகளும் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தெர்வானது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் நினைவு பரிசு வழங்கினார். மேலும், வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தவ அமுதம் மெட்ரிக் பள்ளி தளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி வாழ்த்தி பேசினர். முதுகலை ஆசிரியர் இளையகுமார் நன்றி கூறினார்.
உற்சாகமாக பதிலளித்த மாணவர்கள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி - வினா போட்டியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு, மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் பதில் அளித்தனர். உடனுக்குடன் பதில் அளித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரங்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
டை பிரேக்
மூன்று சுற்று முடிவில், பி அணி 20 மதிப்பெண் பெற்று முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டது. ஆனால், ஏ மற்றும் இ அணியினர் தலா 15 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். இதனால், இந்த இரண்டு அணியினருக்கும் டை பிரேக் முறையில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், முதலில் பதில் அளித்த ஏ அணியினர் இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.