வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : ஜன 19, 2026 12:31 PM
ADDED : ஜன 19, 2026 12:35 PM
விழுப்புரம்: வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த 1ம் தேதி முதல் துவங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து, வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி அல்லது பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதிகளை வேலை வாய்ப்பு அலுவலுகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர், இளம் பெண்கள் மற்றும் ஓராண்டிற்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வருமான வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள், கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று 45 வயதிற்கு மிகாமலும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
வேலைவாய்ப்புத் துறையின் https://employmentexchange.tn.gov.in/ என்ற இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 28ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் நேரில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

