மாணவர்களுக்கு 'இன்ஸ்பயர்' விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
மாணவர்களுக்கு 'இன்ஸ்பயர்' விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : ஆக 19, 2026 07:22 PM
ADDED : ஆக 19, 2026 07:24 PM
சென்னை:
'புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும், 'இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில், பள்ளி, மாணவ, மாணவியருக்கு, 'இன்ஸ்பயர்' விருதுகள் வழங்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்துதல், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில், சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
புத்தாக்க முயற்சியில் ஆர்வமுள்ள, மாணவ, மாணவியர், 'இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் புத்தாக்க முயற்சியில், சிறப்பான ஐந்து பேரின் திட்டங்களை தேர்வு செய்து, அவற்றை, www.inspireawards-dst.gov.in இணையதளத்தில், வரும் செப்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும்.
அதில், சிறந்த புத்தாக்க திட்டங்கள், தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு திட்டத்திற்கும், மத்திய அரசின் சார்பில், 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த ஊக்கத்தொகையை வைத்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், மாவட்டந்தோறும் நடத்தப்படும் போட்டியில், தங்களின் புத்தாக்க திட்டத்தை மேம்படுத்தி, காட்சிப்படுத்த வேண்டும். அதில், சிறப்பான படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர். அதில் சிறப்பான பங்களிப்பை வழங்குவோருக்கு, 'இன்ஸ்பயர்' விருது, ஜப்பான் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும்.
