UPDATED : ஜன 22, 2025 12:00 AM
ADDED : ஜன 22, 2025 10:57 AM

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., மற்றும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து, சவுத் ஏசியா இன்ஸ்டிடியூட் டிரான்ஸ்பர்மேஷன் கனெக்சன் என்ற ஆவண காப்பக கண்காட்சி நேற்று துவங்கியது. இந்த கண்காட்சி இரண்டு மாதங்களுக்கு நடக்கிறது.
பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். ஐ.ஐ.டி., துவங்கிய காலம் முதல் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பற்றிய பல்வேறு ஆவண தொகுப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஐ.ஐ.டி.,யில் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய பல தொகுப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்து பேசியதாவது:
ஒரு நிறுவனம் சிறந்த நிறுவனமாக மாறுவதற்கு 20 முதல் 25 வருடங்கள் எடுத்துக் கொள்ளும். நிறுவனங்களின் உயர் தரத்தை நிர்ணயிப்பது அதன் கட்டடங்களுடன் கூடிய உள்கட்டமைப்பு, மக்களின் பங்கும் முக்கியம்.
அனைத்து கலாசாரத்திற்கும் ஆவண காப்பகம் என்பது முக்கியம். அவை இருந்தால் தான் நாடு சிறந்ததாக விளங்கும்.
கலை இலக்கியம், கவிதைகள், அறிவியல்சார் விஷயங்கள் என, பல நம்மிடம் உள்ளன. சென்னை ஐ.ஐ.டி.,யில் சமூக அறிவியல் துறை இணைந்து, பராமரித்து வரும் ஆவண காப்பகம் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில்,சென்னை ஐ.ஐ.டி., டீன் ரகுநாதன் ரங்கசாமி, இணைப் பேராசிரியர் மாதங்கி கிருஷ்ணமூர்த்தி, ஆவண காப்பக தலைமை அதிகாரி பொன்னரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.