மாணவர்கள் சொல்வதை தான் ஸ்கிரைப் எழுதுகிறார்களா? உறுதிப்படுத்த சி.இ.ஓ., அறிவுரை
மாணவர்கள் சொல்வதை தான் ஸ்கிரைப் எழுதுகிறார்களா? உறுதிப்படுத்த சி.இ.ஓ., அறிவுரை
UPDATED : பிப் 27, 2026 04:56 PM
ADDED : பிப் 27, 2026 05:00 PM

பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் பறக்கும்படை அலுவலர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்த ஆலோசனை கூட்டம், கோவை பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பேசியதாவது:
பறக்கும் படை அதிகாரிகளாக இருக்கும் ஆசிரியர்கள், வரையறுத்து கொடுக்கப்பட்ட தேர்வு மைய எல்லைகளுக்குள் மட்டுமே பணிபுரிய வேண்டும். எல்லை மீறக்கூடாது.
தேர்வு அறைகளுக்கு சென்று முறையாக மாணவர்கள் கண்காணிக்கப்படுகிறார்களா என்பதை பார்க்க வேண்டும். மாணவர்களோ, அவர்களுக்கு துணையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களோ, முறைகேட்டிலோ, அதற்கு துணையாகவோ இருக்கிறார்களா என்பதை அறிய வேண்டும்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடம், அவர்களது உடைகளை சோதிக்க வேண்டும். அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக, ஸ்கிரைப் பணியில் ஈடுபட்டிருப்போரை கண்காணிக்க வேண்டும்.
அவர்கள் மாணவர்கள் சொல்வதை தான் எழுதியிருக்கின்றனரா என்பதை சரிபார்க்க வேண்டும். எந்த சிறு முறைகேடுகளுக்கும் இடமின்றி தேர்வு நடத்த வேண்டும்.
சரியான நேரத்துக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள், விடைத்தாள், கூடுதல் விடைத்தாள் ஆகியவற்றை உடனுக்குடன் தாமதமின்றி வழங்க வேண்டும். தாள்களை இணைப்பதற்கான நுால் உள்ளிட்டவற்றை சரியாக கொடுக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

