UPDATED : ஜூலை 19, 2024 12:00 AM
ADDED : ஜூலை 19, 2024 10:22 AM
அசோக் விஹார்:
வடமேற்கு டில்லியின் அசோக் விஹார் பகுதியில், உள்ளூர் குழந்தைகளுக்கு துவக்கக் கல்வி வழங்குவதற்காக மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி விரைவில் திறக்கப்பட உள்ளது என மேயர் ஷெல்லி ஓபராய் நேற்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி தலைமையிலான டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் கட்டப்பட்ட மூன்றாவது துவக்கப் பள்ளி இது.
புதிய பள்ளி திறப்பு குறித்து மேயர் ஷெல்லி ஓபராய் நேற்று கூறியதாவது:
நகரின் 12 மண்டலங்களில் 1,185 இடங்களில் 1,535 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இவற்றில் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கேசவ்புரம் மண்டலத்தில் உள்ள அசோக் விஹாரின் சி-2 பிளாக்கில் மாநகராட்சி சார்பில் புதிய பள்ளி கட்டப்பட்டு வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த பள்ளி அடுத்த 15 நாட்களில் திறக்கப்படும்.
புதிய பள்ளி, 14 வகுப்பறைகள், 2 நர்சரி அறைகள், ஒரு கணினி அறை, அலுவலக இடம், நுாலகம், அறிவியல் அறை, பணியாளர் அறை, மருத்துவ அறை, விளையாட்டு அறை, ஒரு கூடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தால் கட்டப்பட்ட மூன்றாவது மாநகராட்சி பள்ளி இதுவாகும். கடந்த ஆண்டு மேற்கு டில்லி மண்டலத்தில் உள்ள விஷ்ணு கார்டனில் ஒரு பள்ளியையும், நரேலா மண்டலத்தில் உள்ள பவானாவில் ஒன்றையும் நாங்கள் திறந்து வைத்தோம்.
இந்தப் பள்ளிகள் உள்ளூர் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு துவக்கக் கல்வியை வழங்குவதோடு அவர்களின் அடிப்படைக் கற்றலை வலுப்படுத்த உதவுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.