செயலி வாயிலாக தானியங்கி விவசாய ஆலோசனை! வேளாண் பல்கலை அறிவிப்பு
செயலி வாயிலாக தானியங்கி விவசாய ஆலோசனை! வேளாண் பல்கலை அறிவிப்பு
UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 09:27 AM

- நமது நிருபர் -
கோவை:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில், தானியங்கி வேளாண் வானிலை சேவைக்கான செயலிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு சாகுபடி சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் நோக்கில், கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், கடந்த, 2018ல், விவசாயம் சார்ந்த தானியங்கி ஆலோசனை செயலி உருவாக்கப்பட்டது.
கடந்த, 2022 வரை பயன்பாட்டில் இருந்த இந்த செயலி, தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, கூகுள் பிளே ஸ்டோரில், tnau aas என 'டைப்' செய்து, 'தானியங்கி வேளாண் வானிலை சேவை' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, ஆண்ட்ராய்டு மொபைல் போனில் நிறுவிக் கொள்ளலாம்.
அதில் தங்கள் சுய விபரம் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட வேண்டும். முக்கியமாக, தங்களின் பெயர், தந்தை பெயர், மாநிலம், மாவட்டம், வட்டாரம், மொபைல் எண் மற்றும், 8 இலக்க கடவுச்சொல் விபரங்களை மட்டும் பதிவிட்டால் போதும்.
தாங்கள் பயிரிட்டுள்ள அல்லது ஓரிரு வாரங்களுக்குள் பயிரிடப் போகும் பயிர், விதைப்பு தேதி பதிவிட வேண்டும். தங்கள் பயிருக்கு தேவையான வானிலை சார்ந்த ஆலோசனைகள், வாரத்துக்கு ஓரிரு முறை இந்த செயலியில் கிடைக்கும். பதிவு செய்துள்ள பயிர்களை செயலியின் திரையில் தொட்டவுடன், அதற்குரிய ஆலோசனை காண்பிக்கப்படும்.
விவசாயிகளுக்கு தங்கள் கிராமத்தின் வானிலை சார்ந்த விபரம், இச்செயலி வாயிலாக கிடைக்கும் என்பதால், இந்த செயலியை பயன்படுத்தி, வானிலை இடர்பாடுகளை தவிர்க்கலாம்.
என்னென்ன வசதிகள்?
மேம்படுத்தப்பட்ட செயலியில், எத்தனை பயிர் விபரத்தையும் அறிந்து கொள்ள முடியும். பயன்பாட்டில் உள்ள பூச்சிக்கொல்லி குறித்த விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
உழவு துவங்கி, அறுவடை வரை பொதுவான வேளாண் தகவல்கள் கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் பயிர் மேலாண்மை இயக்ககம் சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.